செல்பேசி அடிக்க ஆரம்பித்ததும் 20 வயது கிரித் வேகமாக எழுந்து ஒரு கணிணி முன் அமர்ந்து, ஹெட்ஃபோன்களை மாட்டி, ஒரு பேனாவை எடுத்து ஒரு டைரியை திறந்து வைத்துக் கொள்கிறார்.
“வணக்கம், ஷிவார் சேவை மையம்,” என்கிறார் அவர் அமைதியான திடமான குரலில்.
மறுமுனையில், மகாராஷ்டிராவின் நந்தெட் மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் விவசாயியான பார்வதி பேசுகிறார்.
“என்ன உதவி வேண்டும்?” என மராத்தி மொழியில் கேட்கிறார் கிரித். உளவியலில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வரும் அவர், பர்பானியின் கிராமத்தை சேர்ந்தவர்.
தயங்கும் பார்வதியின் குரல் உடைகிறது.
”மழைகள் எங்களின் பயிர்களை அழித்துவிட்டது,” என்கிறார் அவர். “சோயாபீன், துவரை பயிர், ஆடுகள் எல்லாம் போய்விட்டது. இப்போது எந்த வேலையும் இல்லை.” குடும்பத்துக்கான நிலைத்தன்மையை வழங்கிய விவசாயம், கால்நடைகள், கூலி வேலை யாவும் நீருக்கு அடியில் சென்றுவிட்டது. கடன்கள் அடைக்கப்படவில்லை. நம்பிக்கை மூழ்கிவிட்டது. வரும் குறுவைக்காலத்துக்கு பச்சைப் பயிர் விதைகளை கொடுக்கலாமா என அவர் கேட்கிறார்.
“விதைகள் கிடைத்தால், கோடைகாலத்தில் நாங்கள் தப்பித்துக் கொள்வோம்,” என்கிறார் அவர்.

























