இது இந்தியன் பிரீமியர் லீக்கின் உச்சகட்டமான காலகட்டம். ஆனாலும் நயாகான் கிராமத்தில் மக்களின் மனங்களில் கிரிக்கெட் எதுவும் இல்லை.  பக்கத்து கிராமம் துமாஸ்பூரில் நடந்த வன்முறையின் மிச்சங்கள் இன்னமும் இங்கே இருக்கின்றன. இந்த வருடத்தின் ஹோலிப் பண்டிகையான மார்ச் 21  அன்று இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு ஒரு முஸ்லிம் சமூகம் மீதான தாக்குதலாக மாறியது. இதைப் பற்றிய செய்திகளை எல்லா ஊடகங்களும் வெளியிட்டன. கம்பிகளையும் கம்புகளையும் வைத்து அடித்தவர்கள் “போய் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடு” என்று திட்டியிருக்கின்றனர். வன்முறைத்தாக்குதலை நடத்திய ஐந்து பேர்களில் மூன்றுபேர் நயாகான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

“இந்தப் பகுதியின் விவகாரங்களைக் கவனிக்கிற காவல்துறை, இந்தத் தாக்குதல்கள் பற்றி நடவடிக்கைகள் எடுப்பதில் மெத்தனமாக இருக்கிறது. “ என்கிறார் ஒரு இல்லத்தரசியான ராகி சவுத்ரி (31). “ கிராமத்து பையன்கள் பெண்களை பாலியல்ரீதியாக சீண்டும்போது, சண்டைகள் வரும்போது தலையிடுவதற்கு நாங்கள் எட்டு பத்து பெண்களைக் கொண்ட குழுவை அமைத்திருக்கிறோம்.   இதுதான் எங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி. காவல்துறையினர் போக்குவரத்தை கண்காணிக்கின்றனர். அல்லது அரசியல்வாதிகள் வந்தால் அவர்களைப் பாதுகாக்கிறார்கள். பணக்காரர்கள் அழைத்தால் உடனடியாக வேலை செய்வார்கள். எங்களை அவர்கள் ஜந்துக்களைப் பார்ப்பதுபோல பார்க்கிறார்கள்.”

நயாகானின் கிருஷ்ண குன்ஞ் காலனியில் ராகி வசிக்கிறார். (மாருதி குன்ஞ்  காலனியும் இங்கே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின்  தலைவராக இருந்த சஞ்சய் காந்தி இந்தப் பகுதியில் ஜப்பான் கார் கம்பெனியான சுசுஹியோடு இணைந்து மாருதி கார் கம்பெனியை 1970களில் உருவாக்கியபோது இந்தப் பகுதியில் அந்தக் கம்பெனியின் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உருவானபோது இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

அரியானா மாநிலத்தின் குருக்ராம் மாவட்டத்தில் சோக்னா தாலுகாவின் போன்ட்சி கிராமத்திலிருந்து 2016 ஜனவரியில் தனியாகப் பிரிக்கப்பட்டது  நயாகான் பகுதி. குருக்ராம் மக்களவைத் தொகுதியின் தேர்தலுக்காக இந்த கிராமத்தில் மே 12 அன்று தேர்தல்கள் நடைபெற உள்ளது.

குருக்ராம் நாடாளுமன்றத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது வெற்றியை ராவ் இந்தர்ஜித் சிங் பெற்றார். ஏறத்தாழ 18.46 லட்சம் வாக்காளர்கள் இங்கே உள்ளனர். அதில்  13.21 லட்சம் வாக்குகள் வரை பதிவாகின. இந்திய தேசிய லோக்தள் கட்சியின் ஜாகிர் உசேனை அவர் 2.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2009 ஆம் ஆண்டு வரையில் இந்தத்  தொகுதியில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சியின் தரம்பால் சிங் 133,713 வாக்குகள்தான் பெற்றார். அது பதிவான வாக்குகளில் 10.12 சதவீதம்தான். ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவ் 79,456 வாக்குகளை வாங்கினார். மொத்த வாக்குகளில் 6.02 சதவீதம் அது.

woman
PHOTO • Shalini Singh
Women posing
PHOTO • Shalini Singh
Woman posing by the national flag
PHOTO • Shalini Singh

ராகி சவுத்ரி (இடது) ரூபி தாஸ் மற்றும் அவரது அம்மா பிரபா (நடுவில்), மற்றும் இங்கே உள்ள பெண்கள் பாதுகாப்பும் போக்குவரத்தும்  நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட பிரச்சினைகளாக இருக்கின்றன என்கிறார்கள். ஆனால், பூஜா தேவி (வலது) சில விஷயங்கள் நன்றாக மேம்பட்டிருக்கின்றன என்றார்.

ராவ் இந்தர்ஜித் 2019 மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கேப்டன் அஜய்சிங் யாதவ்வும் , ஜன்னயாக் ஜனதாகட்சி - ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றின் வேட்பாளராக முதலாவதாக தேர்தலில் குதிக்கிற டாக்டர் மெஹ்மூத் கான் ஆகியோர்   மற்ற இரண்டு வேட்பாளர்கள்.

இந்த இரண்டு தேர்தல்களிலும் ராகி மற்றும் மற்ற பெண் வாக்காளர்களின் பிரச்சினைகள் ஒன்றேதான். அது அவர்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினை. கிருஷ்ண குன்ஞ் பகுதியில் வசிக்கும் 20 வயதான மாணவர் ரூபிதாஸ் மதுக்கடைகள் கிராமத்தில் அதிகரித்துவிட்டது என்கிறார். “குடிக்கு அடிமையானவர்கள் அக்கம்பக்கத்தில் அதிகரித்துவிட்டார்கள். போலீஸ்காரர்கள் இத்தகைய புகார்களுக்கு சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. சமீபத்தில் ஒருவர் மதுக்கடையில் ஒரு பெண்ணைப் போட்டு அடித்துக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்த போலீஸ்காரர்கள் கண்டுகொள்ளவில்லை. உள்ளூர் பேருந்துகளிலும் ஆட்டோரிக்ஷாக்களிலும் காலேஜூக்கும் பள்ளிக்கூடத்துக்கும் போகும்போது பைக்குகளில் வந்து பெண்களை துன்புறுத்துகிறார்கள். சாலைகள் பாதுகாப்பு இல்லாதவையாக மாறிவிட்டன” என்கிறார்கள்.

ராவ் இந்தர்ஜித் 2019 மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கேப்டன் அஜய்சிங் யாதவ்வும் , ஜன்னயாக் ஜனதாகட்சி - ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றின் வேட்பாளராக முதலாவதாக தேர்தலில் குதிக்கிற டாக்டர் மெஹ்மூத் கான் ஆகியோர்   மற்ற இரண்டு வேட்பாளர்கள்.

போன்ட்சியின் ஆண்- பெண் விகிதாச்சாரம் என்பது 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி  ஹரியானா மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 1000 ஆண்களுக்கு 879 பெண்கள்தான். அதையும்விட குறைவாக இந்தப் பகுதியில் ஆயிரம் ஆண்களுக்கு 699 பெண்கள்தான் இருக்கிறார்கள். இது குஜ்ஜார்களின் பகுதி. ராஜ்புத்ரர்களும் யாதவ்களும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர் என்று விளக்குகிறார் அரியானாவின் ஜிந்த் தாலுகாவின் பிபிபூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான சுனில் ஜெக்லான். நயாகான் பகுதியிலிருந்து 150 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது அந்தக் கிராமம். “செல்பி வித் டாட்டர்” எனும் பிரச்சாரத்துக்காக அவர் 2015இல் இங்கே வந்திருக்கிறார். “யாதவ்கள் கடந்த ஏழெட்டு வருடங்களாக தங்களின் பெண்களைப் படிக்கவைத்தாலும் குஜ்ஜார்கள் அவர்களைப் படிக்கவைக்கவில்லை என்கிறார் அவர்.“ எட்டாங்கிளாஸ் படிக்கும்போதே குஜ்ஜார் பெண்களுக்கு கல்யாணம் ஆகிவிடுகிறது. அந்தப் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என்பதால்,  மொபைல் போன்களில் காவல்துறையின் உதவி ஆணையரின் நேரடி தொலைபேசி எண்ணை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள நான் முயற்சித்தேன்”

உள்கட்டமைப்பும் இங்கே ஒரு பிரச்சனை. புதிய கிராமம் என்பதால் சரியான எல்லை எதுவும் இன்னும் குறிக்கப்படவில்லை. உள்கட்டமைப்புக்காக 23 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் வந்துசேரவில்லை என்கிறார் புதிய பஞ்சாயத்து தலைவரான சுர்க்யான் சிங். கிராமத்தின் சாலைகள் படுமோசமாக உள்ளன. கால்வாய்களுக்கான கட்டமைப்பும் அங்கே இல்லை. மின்சார வயர்கள் வீட்டுக்கூரைகள் மீது உரசுகின்றன. இதையொட்டி அக்கம்பக்கத்தினர் இடையே சண்டைகள்தான் உருவாகின்றன.

“எங்களது காலனியில் ஆறுவிதமான பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றில்தான் மின்சாரக் கம்பம் இருக்கிறது. மற்ற பகுதிகளில் வயர்கள் குறுக்குமறுக்காக கிடக்கின்றன.மக்கள் அதனை வெட்டிவிடுகிறார்கள். அபாயமான முறையில் வயர்கள் தொங்கிக் கிடக்கின்றன. அதையொட்டி சண்டைகள் வருகின்றன. என்ன செய்யமுடியும்” என்கிறார் 46 வயதான அவதேஷ் குமார். அவர் உதஉத்தரப்பிரதேசத்தந் டியோரியா மாவட்டத்திலிருந்து வந்தவர்.மயூர் குன்ஞ் பகுதியில் அவர் தனியாக வாழ்கிறார். ஹோமியோபதி மருந்துக்கடை ஒன்றை நடத்தி தினமும் 50, 100 சம்பாதிக்கிறார்.

“எங்களது 450 சதுர அடி வீட்டை நாங்கள் 17 லட்சங்களுக்கு இங்கே கட்டினாலும் பாலம் விஹாரில் இதைவிட அதிகம் செலவாகும். ஆனாலும் அங்கே நாங்கள் வாடகைக்குத்தான் இருந்தோம். ஆனாலும் வாழ்க்கை அங்கே நன்றாக இருந்தது. அங்கே பாதுகாப்பு இருந்தது. சுத்தமான வாழ்க்கை. இங்கே குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லை. பூங்காக்கள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. எட்டாங்கிளாஸ் வரைக்கும் இருக்கிற அரசுப் பள்ளிதான் இருக்கு” என்றார் ராகி. அவரது கணவர் மனேசரில் உள்ள ஏற்றுமதி ஆடைத் தொழிற்சாலையில் பணி செய்கிறார்.

போக்குவரத்துக்கான போதுமான ஏற்பாடுகள் இல்லாததால் ஆட்டோரிக்சாவும் பள்ளி வேன் டிரைவர்களும் ஏற்ற இறக்கமான வாடகைகளை வசூலிக்கின்றனர். “பள்ளி செல்வதற்கான வேன்கள் சாதாரணமான கட்டணங்களை விட அதிகம் கேட்கின்றனர். தேவையான அளவு பயணிகளை ஏற்றமுடியாததால் கூடுதல் பணம்  வேண்டும் என்கின்றனர் ஆட்டோக்காரர்கள். போக்குவரத்து பிரச்சினையால் கல்லூரி மாணவிகள் கூட பாதியில் படிப்பை விட்டுவிடுகின்றனர். அருகே இருக்கிற மெட்ரோ ஸ்டேஷன் போகவே 15 கிலோமீட்டர் போகவேண்டும். மாநில அரசு பஸ் ஒன்று வழக்கமாக இங்கிருந்து போகும். தற்போது அதுவும் நின்றுவிட்டது” என்கிறார் ரூபி.

Street
PHOTO • Sunil Jaglan
Electricity post
PHOTO • Sunil Jaglan

டெல்லியிலிருந்து வரும் பாதையில் பளபளப்பான கட்டமைப்புகள் குருக்ராம் எங்கும் உள்ளன. பாடாவதி சாலைகள், திறந்த கால்வாய்கள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கும் வயர்கள். அனைத்தும் இருக்கின்றன.

அவள் காலையில் ஐந்து மணிக்கு  எழுந்துவிடுவாள். ஒரு குடியிருப்பில் தோட்டக்காரராக வேலை செய்யும் அப்பாவோடு போவாள். ஒன்பது மணிக்கு அவள் வகுப்புகளுக்கு போகவேண்டும். கோச்சிங் சென்டர் கூட அவளது வீட்டிலிருந்து 45 நிமிட தூரத்தில் இருக்கிறது. அவள் நீட் தேர்வுக்காக படிக்கிறாள். “வேறு வேறு பஸ்களில் போய் பிறகு ஆட்டோவில் போகவேண்டும். என்னை முதலில் இறக்கிவிட்டுவிட்டு அதன் பிறகு அப்பா வேலைக்கும் போவார்.” என்று விளக்குகிறார் அந்தப் பெண். அவளது அம்மா பார்பா தாஸ் (38) ஒரு கடையில் வேலை செய்கிறார். 10, 15 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது அந்தக் கடை. அவர் மாதம் 10 ஆயிரம் சம்பாதிக்கிறார். ஆனால் தினமும் அவர் வேலை செய்யும் இடத்தை அடையவே இரண்டு மணிநேரம் ஆகிறது.

குருக்ராம் பகுதியை சிலர் ‘மில்லேனியம்’  சிட்டி என்பார்கள். இந்தியாவின்சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த ஒன்றாக இந்தப் பகுதி இருக்கிறது. பேன்ஸி மால்கள், ஆடம்பரமான தனியார் பள்ளிகள், பல மாடி குடியிருப்புகள், கோல்ப் விளையாட்டு பயிற்சியகங்கள், எண்ணற்ற கம்பெனிகள் ஆகியவை கொண்ட பகுதி அது. மத்திய டெல்லியிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அது. பளபளப்பான பல விஷயங்கள் அந்தப் பகுதியில் உருவாகிக்கொண்டிருந்தாலும் நயாகான் மற்றும் போன்ட்சியின் படுமோசமான சாலைகளும் திறந்த சாக்கடைகளும் முரண்பாடான விஷயம்தான்.

ஏதாவது குறைந்திருக்கிறதா? என்று கேட்டால், “ஊழலும் லஞ்சம் கொடுப்பதும் குறைந்திருக்கு” என்கிறார் பூஜாதேவி (30) எனும் இல்லத்தரசி.அவரது கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். “தாத்தா பாட்டிகளுக்கு அவர்களது ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன என்கிறார்கள். எங்களுக்கு எல்லாம் சமையல் காஸ் கிடைத்துள்ளது. ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்கிறோம். “நாமும் ஒரு ஆள்தான்” என்று மோடி உணரவைத்திருக்கிறார்” என்கிறார் அவர்.

பஞ்சாயத்து தலைவர் சர்க்யான் சிங் மே மாத வெயிலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார் அவர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் இந்தர்ஜித் சிங் மறுநாள் வர இருக்கிற சூழலில் பூஜா சொல்கிறார் “பிஜேபி பிரதிநிதிகளிடம் பத்திரத்தாளில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் எழுதிக்கொடுக்குமாறு கோருவோம். செய்யவில்லை என்றால் இந்த வருடம் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவோம்” என்கிறார்.

மறுநாள் அவர் வந்து போனதும் ஜக்லான் எனக்கு போன் செய்தார். “ அவர் ஐந்து நிமிடங்கள்தான் வந்தார். நாங்கள் வெற்றிபெற்றால் என்ன எங்களால் முடியுமோ அதைச் செய்வோம் ” என்றார் என்று விவரித்தார். மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் நயாகானில் கால்வைக்கவில்லை.

Group of people posing
PHOTO • Shalini Singh
Man poses in front of a dispensary
PHOTO • People's Archive of Rural India

இடது- ஏதேனும் அபாயம் என்றால் காவல்துறை உதவி ஆணையரின் நேரடி தொடர்பு எண்ணை வைத்துக்கொள்ளுங்கள் என்று நான் பெண்களிடம் பேசினேன். என்கிறார் சுனில் ஜக்லான். வலது-  எனது காலனியில் உள்ள ஆறு பகுதிகளில் ஒன்றில்தான் மின்சாரக் கம்பம் இருக்கிறது என்கிறார் அவாதேஷ் சகா.

“ராவ் இந்தர்ஜித் சிங் போன் ஞாயிற்றுக் கிழமை கிராமத்துக்கு வந்தபோது மோடியின் பெயரைச் சொல்லி வாக்குகளைச் சேகரித்தார். பெரும்பாலான தலைவர்கள் மோடியின் பெயரைச்சொல்லி வாக்குகளைச் சேகரிக்கிறார்கள். ” என்கிறார் அவதேஷ் சகா. “ இந்த தேர்தலில் 80 சதவீதமான வாக்குகள் பாஜகவுக்கு போகும். நாட்டின் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரமும் மோடியின் பெயரும் அதற்குக் காரணம்” என்றார் அவர்.

ஹோலி பண்டிகை அன்று நடைபெற்ற வன்முறைகள் ஒரு தேர்தல் விவகாரம் என்று சகா நினைக்கவில்லை “ அது வாக்களிப்பதை முடிவு செய்யும் என்று நான் நினைக்கவில்லை. அந்த விவகாரம் இரண்டு வாரங்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது” என்கிறார் அவர்.

ஹோலி பண்டிகையில் தாக்கப்பட்ட குடும்பம் தான் கொடுத்த புகாரை மூன்று வாரங்களுக்குப் பிறகு திரும்ப பெற்றுக் கொண்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஏதோ ஒரு சமரசம் செய்துகொண்டார்கள்.

“ அந்த விவகாரம் தீர்ந்துபோய்விட்டது. மக்கள் அதைப்பற்றி நினைக்கமாட்டார்கள். அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்கவேண்டி இருக்கிறது” என்கிறார் முகம்மது தில்சாத். தாக்குதல் நடைபெற்றது பற்றி புகார் கொடுத்தவர்களில் அவர்தான் முக்கியமானவர்.

“நான் வேலை செஞ்சு பிழைக்கிறவன். எனக்கு நிறைய நேரம் கிடையாது. எனக்கு நேரம் இருந்தால் நான் போய் ஓட்டு போடுவேன்”. என்கிறார் அவர்.“ எல்லா கட்சி அரசியல் வாதிகளும் அவர்களின் சொந்த லாபங்களுக்காக சாதிவாதம் பற்றி பேசுகிறார்கள். எந்த கட்சியும் உண்மையில் நாங்கள் உங்களுக்கு என்ன செய்வோம் என்பதைச் சொல்வதில்லை. ரோடுகள் போடுவது, வேலைகள் தருவது, மின்சாரம், உள்ளிட்டவை தருவது பற்றி யாரும் பேசுவதில்லை. எப்போ பாரு இந்து - முஸ்லிம் பிரச்சனை. ஒருத்தர் இந்துவாக இருக்காரா முஸ்லிமா இருக்காரா என்பது பிரச்சனை இல்லை. மக்களோட பிரச்சனைகளைத்தான் தீர்க்கணும்”

தமிழில் : த. நீதிராஜன்

Shalini Singh

Shalini Singh is a founding trustee of the CounterMedia Trust that publishes PARI. A journalist based in Delhi, she writes on environment, gender and culture, and was a Nieman fellow for journalism at Harvard University, 2017-2018.

Other stories by Shalini Singh
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan